×

அஹ்லுல் பைத்- சிறப்புக்களும் உரிமைகளும் (தமிழ்)

ஆக்கம்: அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி

Description

’அஹ்லுல் பைத்’ என்போர் யார், ’அஹ்லுல் பைத்’ பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள், அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள், அஹ்லுல் பைத்தின் உரிமைகள்.

Download Book

    அஹ்லுல் பைத்

    சிறப்புக்களும் உரிமைகளும்

    கலாநிதி

    அமீன் பின் அப்தில்லாஹ்

    அஷ்ஷகாவீ

    தமிழில்

    எம். அஹ்மத் (அப்பாஸி)

    மீள்பரிசீலனை

    எம். ஜே. எம். ரிஸ்மி (அப்பாஸி, M. A)

    வெளியீடு

    இஸ்லாமிய அழைப்பு நிலையம்

    ரியாத் – ஸவூதி அரேபியா

    فضائل أهل البيت وحقوقهم

    إعداد

    الدكتور / أمين بن عبد الله الشقاوي

    ترجمة

    أحمد بن محمد

    مراجعة

    محمد رزمي محمد جنيد

    الناشر

    المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالربوة

    الرياض

    المملكة العربية السعودية

    بسم الله الرحمن الرحيم

    புகழனைத்தும் ஏக வல்லவன் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

    வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், ஈடிணையற்றவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன்.

    நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்த்துக்களும் பல சிறப்புக்களும் உள்ளன. அவர்களைக் கவனத்திலெடுக்குமாறு நபிகளார் உபதேசித்துள்ளார்கள். ''என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன், என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன், என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்''.([1]) அஷ்ஷேஹ் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறினார்கள் : 'அதாவது நீங்கள் அல்லாஹ்வை நினைவில் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் உரிமையை வீணடித்தால் அவனுடைய வேதனையையும் பழிவாங்களையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்கள் விடயத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டால் அவனுடைய கருணையையும் நற்கூலியையும் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள். அவர்கள் நபியின் உறவுக்காரர்கள் என்பதாலும் அல்லாஹ்வை விசுவாசங் கொண்டதாலும் அவர்களை நாம் நேசிக்கிறோம். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், நபியின் உறவுக்காரர்களாக இருந்தாலும் நாம் அவர்களை நேசிக்கமாட்டோம். நபிகளாரின் சிற்றப்பா அபூலஹபை எவ்விதத்திலும் நாம் நேசிக்கலாகாது. மாறாக அல்லாஹ்வை நிராகரித்ததாலும் நபியவர்களை நோவினைப் படுத்தியதாலும் நாம் அவனை வெறுப்பது அவசியமாகும்'.([2])

    'அஹ்லுல் பைத்' என்போர் யார் ?

    'அஹ்லுல் பைத்' என்போர் யார் என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு பட்டுள்ளனர். யாருக்கெல்லாம் ஸகாத் பெற முடியாதோ அவர்களே அஹ்லுல் பைத் என்பதுதான் மிக வலுவான கருத்தாகும். நான்கு மத்ஹப்களினதும் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்து இதுவாகும். இக்கருத்தையே அறிஞர்களான இப்னு ஹஸ்ம்(ரஹ்), இப்னு தைமியா(ரஹ்), இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் வலுப்படுத்தியுள்ளனர். அவர்கள் எக்குடும்பங்களென வரையறுப்பதிலும் பல கருத்துக்கள் உள்ளன. அவற்றில் இரு கருத்துக்கள் பிரபலமானவை :

    1. அவர்கள் ஹாஷிம் மற்றும் முத்தலிப் ஆகியோரின் சந்ததிகளாவர் என்பது அறிஞர்களான இப்னு ஹஸ்ம்(ரஹ்), இப்னு ஹஜர்(ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.

    2. அவர்கள் ஹாஷிமின் சந்ததிகளாவர் என்பது அறிஞர்களான அபூஹனீபா(ரஹ்), மாலிக்(ரஹ்), இப்னு தைமியா(ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.

    வலுவான கருத்தின்படி ஹாஷிமின் சந்ததிகள் பின்வருவோராகும் :

    · அப்பாஸ் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.

    · அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.

    · ஜஃபர் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.

    · அகீல் (ரலி) அவர்களின் குடும்பத்தினர்.

    · ஹாரிஸ் இப்னு அப்தில் முத்தலிபின் குடும்பத்தினர்.

    · நபியவர்களின் மனைவியரும் அஹ்லுல் பைத்தில் அடங்குவர்.

    'அஹ்லுல் பைத்' பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள்:

    1. "உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸகாத்தைக் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள். அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்." (அஹ்ஸாப் 33,34 )

    இவ்வசனம் அவர்களும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் கண்டிப்பாக அடங்குவார்கள் என்பதை அறிவிக்கின்றது. ஏனெனில் இதற்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்கள் அவர்களை விழித்தே பேசுகின்றன.([3])

    2. தாபிஈன்களில் ஒருவரான காலித் இப்னு ஸஈத் என்பவர் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களுக்கு ஸகாத் பொருளிலிருந்து ஒரு மாட்டை அனுப்பினார்கள். "நாங்கள் நபிகளாரின் குடும்பத்தினர். எங்களுக்கு ஸகாத் ஹலாலாக மாட்டாது" என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.([4])

    3. மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியையும் நபியவர்களின் மனைவியரும் அஹ்லுல் பைத்தில் அடங்குவர் என்பதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர் :

    "மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்".([5]) மற்றோர் அறிவிப்பில் "எங்களுக்கு ஸகாத் ஹலாலாக மாட்டாது" என்று இடம்பெற்றுள்ளது.([6])

    4. ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கும்மு'([7]) எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக்கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, "இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.

    பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்'' என்று (மூன்று முறை) கூறினார்கள்.

    அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்கள்.

    அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்'' என்று கூறினார்கள்.

    அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் "அவர்கள் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத் தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)'' என்று பதிலளித்தார்கள்.

    ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "ஆம்'' என்று பதிலளித்தார்கள்.([8])

    · அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் அவர்களால் உரிமை இடப்பட்டவர்களும் அடங்குவார்கள்.

    5. அபூராபிஃ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : பனூ மக்ஃஸூம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் ஸகாத் சேகரிக்க அனுப்பினார்கள். அந்நபர் அபூராபிஃ இடம் 'அந்த ஸகாத்திலிருந்து உங்களுக்கும் கிடைக்கும் பொருட்டு நீங்களும் என்னுடன் பயணியுங்கள்' என்று கூறினார். 'இல்லை, நான் நபியவர்களிடம் சென்று கேட்கும் வரை நான் வரமாட்டேன்' என்று அபூராபிஃ கூறிவிட்டு நபியவர்களிடம் சென்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "எங்களுக்கு ஸகாத் ஹலாலாக மாட்டாது, ஒரு சமூகத்திடமிருந்து உரிமை இடப்பட்டவர்களும் அச்சமூகத்தைச் சார்ந்தவர்களே" என்று கூறினார்கள்.([9])

    6. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ஃபய்உ )போரின்றி கிடைக்கும்( செல்வத்திலிருந்து தமக்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து வரவேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா(ரலி) ஆளனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற நிலத்தையும் "ஃபதக்" பிரதேசத்திலிருந்த நிலத்தையும் கைபரில் கிடைத்த ஐந்திலொரு பகுதி நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான்" என்று சொன்னார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இந்தச் செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான். அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறினார்கள்.([10])

    இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்குத் தனிச்சிறப்புக்கள் பல உள்ளன. ஸகாத் பெற முடியாதென்பதும், நபி (ஸல்) அவர்களின் சொத்துகளுக்கு வாரிசாக வரமுடியாது என்பதும் அச்சிறப்புக்களில் உள்ளவையாகும்.([11])

    7. அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (இந்நபிமொழியின் தொடரில்)….. "ஸகாத் பொருள் முஹம்மதுக்கும் முஹம்மதின் குடும்பத்தாருக்கும் ஹலாலாக மாட்டாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று கூறினார்கள்([12])

    ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) கூறுகின்றார்கள் : அப்பாஸ் (ரலி), ஹாரிஸ் இப்னு அப்தில் முத்தலிப் ஆகியோரின் சந்ததியினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரே. அவர்களுக்கும் ஸகாத் ஹலாலாக மாட்டாது என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

    முத்தலிபின் சந்ததியினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரே என்று கூறுவோர் பின்வரும் நபிமொழியை மேற்கோள் காட்டுகின்றனர் :

    8. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் சந்ததியினர்க்கு (போரில் கிடைக்கும்) ஐந்திலொரு பகுதி நிதியிலிருந்து கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவுமுறை உடையவர்கள் தாமே? என்று கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முத்தலிபின் சந்ததியினரும் ஹாஷிமின் சந்ததியினரும் ஒருவர் தாம்" என்று கூறினார்கள். பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் ஐந்திலொரு பகுதி நிதியிலிருந்து பங்கு தரவில்லை என்று ஜுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ([13])

    மற்றோர் அறிவிப்பில் : "நாங்களும் முத்தலிபின் சந்ததியினரும் அறியாமைக் காலத்திலோ இஸ்லாத்திலோ பிரிய மாட்டோம். நாங்களும் அவர்களும் ஒருவர் தாம்" என்று கூறிவிட்டு தனது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். ([14])

    அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள் :

    அஹ்லுல் பைத் பற்றி பல விதமான சிறப்புக்கள் அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன.

    அல்குர்ஆனிலிருந்து :

    1. இறைவன் கூறுகின்றான் : இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அஹ்ஸாப் 33).

    ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) கூறுகின்றார்கள் : நபியவர்களின் குடும்பத்தை விட்டு அசுத்தத்தை நீக்கவும், அவர்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே நாடுகிறான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்திய போது நபியவர்கள் தனது குடும்பத்தில் மிக நெருக்கமான, மிகவும் சிறப்புக்குரியவர்களை அழைத்தார்கள். அவர்கள் யாரெனில், அலீ (ரலி), பாத்திமா (ரலி), சுவன வாலிபர்களின் இரு தலைவர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோராவர். அல்லாஹ் அவர்களுக்கு பரிசுத்தப்படுத்தல், நபியவர்களின் பரிபூரண பிரார்த்தனை ஆகிய இரண்டையும் ஒருசேரக் கொடுத்துள்ளான். இதிலிருந்து, அவர்களை விட்டு அசுத்தத்தை நீக்குவதும், அவர்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவதும், அவர்களுடைய எவ்வித முயற்சியுமின்றி, அல்லாஹ் அவர்களுக்கு பரிபூரணமாக வழங்க விரும்பிய அருட்கொடையாகவும், அவனிடமிருந்து வந்த கருணை மற்றும் சிறப்பாகவும் உள்ளதென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.([15])

    (ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்)) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள பின்வரும் நபிமொழியையே சுட்டிக் காட்டுகின்றார்கள் :

    ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக் கொண்டார்கள்; பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபி (ஸல்) அவர்களுடன் நுழைந்து கொண்டார்கள்; பிறகு (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்) நுழைத்துக் கொண்டார்கள். பிறகு (மருமகன்) அலீ (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்கள். பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத் தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்'' எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்."([16]) மேலும் இப்னு தைமியா(ரஹ்) கூறுகின்றார்கள் : மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகளாகிய ஸகாத்தை அவர்களுக்குத் தடைசெய்திருப்பதும் அவர்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவதில் உள்ளதாயிருக்கலாம்.([17])

    2. இறைவன் கூறுகின்றான் : உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக! (ஆலு இம்ரான் 61). மேற்கண்ட வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா, இவர்கள்தான் என்னுடைய குடும்பத்தினர் என்றார்கள்".([18])

    மக்கா வெற்றிக்குப்பின் ஹிஜ்ரி 9 அல்லது 10ல் நஜ்ரான் பகுதியிலிருந்து ஒரு கூட்டம் வந்த போதே இந்த சாபமிட்டுக் கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்கண்ட நால்வரையும் ஒரு போர்வைக்குள் நபி (ஸல்) அவர்கள் போர்த்திய நபிமொழியைப் போன்றே இவ்வசனமும் அவர்களுக்கிடையே உள்ள நெருங்கிய தொடர்பை வெளிக்காட்டுகின்றது. ([19])

    சாபமிட்டுக் கொள்வது பற்றிய நபிமொழியை சில அறிஞர்கள் அஹ்லுல் பைத்தினரின் சிறப்புக்களில் சேர்த்துள்ளனர். மேற்கண்ட நபிமொழியைப் பற்றி ஸமஹ்ஷரீ என்ற அறிஞர் போர்வைக்குள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தவர்களின் சிறப்பிற்கு இதனைவிட வலுவான அதாரம் கிடையாது. ([20])

    3. இறைவன் கூறுகின்றான் : "இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்'' என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக!. நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான். (அஹ்ஸாப் 28,29).

    மேற்கண்ட வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் அல்லது அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் தெரிவு செய்யும்படி விருப்பம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்வு செய்தார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.

    4. பின்வரும் வசனமும் அம்மனைவியரின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. இறைவன் கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். (அஹ்ஸாப் 06). அவர்களை முஃமின்களுக்கு அன்னையரென வர்ணித்துள்ளான்.

    ஸுன்னாவிலிருந்து :

    1. வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் "கினானா'([21])வைத் தேர்ந்தெடுத்தான்; "கினானா'வின் வழித்தோன்றல்களில் குறைஷி([22])யரைத் தேர்ந்தெடுத்தான். குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம்([23]) குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.([24])

    அரபு சமூகத்தில் குறைஷிகள் சிறந்தவர்கள். குறைஷிகளில் பனூ ஹாஷிம் குலத்தார் சிறந்தவர்கள். நபி (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தாரில் சிறந்தவர்கள். தனிப்பட்ட ரீதியிலும் வம்ச ரீதியிலும் நபி (ஸல்) அவர்களே படைப்பினங்களில் சிறந்தவர்கள். அரபு சமூகம், பின் குறைஷிகள், பின் பனூ ஹாஷிம் குலத்தார் சிறந்தவர்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் அக்குடும்பத்தில் வந்தார்கள் என்ற காரணத்தினாலல்ல. மாறாக அடிப்படையிலேயே அவர்கள் சிறந்தவர்கள்தாம். அதனால் தனிப்பட்ட ரீதியிலும் வம்ச ரீதியிலும் நபி (ஸல்) அவர்களே சிறந்தவர்கள் என்பது நிரூபணமாகின்றது. ([25])

    2. அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்களைப் பற்றி மக்கள் பேசிக் கொண்ட செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே மிம்பருக்கு ஏறி "நான் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்றனர். அப்போது நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : "நான் அப்துல் முத்தலிபின் மகனாகிய அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத். அல்லாஹ், படைப்பினங்களைப் படைத்து அவனின் சிறந்த படைப்பில் என்னையும் ஆக்கிவைத்தான். அவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து அதில் சிறந்த பிரிவில் என்னை ஆக்கிவைத்தான். கோத்திரங்களைப் படைத்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னை ஆக்கிவைத்தான். அவர்களைப் பல குடும்பங்களாகப் அமைத்து என்னை அவர்களில் சிறந்த குடும்பத்தில் ஆக்கிவைத்தான். நான் உங்களில் குடும்ப ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் சிறந்தவனாகவுள்ளேன். "([26])

    3. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள்மீது எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா அஸ்வாஜிஹி, வதுர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம், வ பாரிக் அலா முஹம்மதின் வஅலா அஸ்வாஜிஹி வதுர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம். இன்னக்க ஹமீதுன் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள். ([27])

    (பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய்.)

    முஹம்மத் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஏனைய குடும்பங்களைக்கான இவர்கள் சிறந்தவர்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

    4. குதைர் என்ற இடத்திலுள்ள நீர்நிலையருகே நபியவர்கள் செய்த உபதேசமும் அஹ்லுல் பைத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் நபிமொழியாகும். இதுபற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

    அஹ்லுல் பைத்தின் உரிமைகள் :

    இஸ்லாமிய சமூகத்தில் யாருக்குமில்லாத, ஏனையோரை விட தனித்து நிற்ககூடிய சில உரிமைகளும் சிறப்புக்களும் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினருக்கு உள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நபி (ஸல்) அவர்களை விசுவாசித்ததுடன் அவர்களுக்கு நெருக்கமாகவும் இருப்பதால்தான் இவ்வாறான உரிமைகளும் சிறப்புக்களும் அவர்களுக்குக் கிடைத்துள்ளன. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கரிசணை எடுக்கும் விடயங்களில் இவ்விடயமும் ஒன்றாகத் திகழ்கின்றது. அதுபற்றி பல நூல்களும் எழுதியுள்ளனர். ([28])

    1. ''என்னுடைய குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்''.([29]) என்ற நபி (ஸல்) அவர்களுடைய உபதேசத்திற்கமைய அவர்களை நேசிப்பது, மதிப்பது, சேர்ந்து நடப்பது அவர்களுக்குரிய உரிமையாகும். அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அஹ்லுல் பைத்தினரை அவர்களுடைய தரத்திற்கு மேல் உயர்த்த மாட்டார்கள். மாறாக அலீ (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் ஸபஃ என்றவன் இறைவனின் தரத்திற்குயர்த்தி "நீங்கள்தான் அல்லாஹ்" என்று கூறியதைப் போன்று அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் அளவு கடந்து செல்பவர்களை விட்டும் இவர்கள் ஒதுங்கித்தான் இருப்பார்கள்.

    குர்துபீ (ரஹ்) கூறுகின்றார்கள் : மேற்கண்ட நபியவர்களுடைய உபதேசமும், மகத்தான உறுதிமானமும், அவர்களுடைய குடும்பத்தினரை கண்ணியப்படுத்தி, அவர்களுக்கு நலவு செய்வதும், அவர்களை நேசிப்பதும் கடமை என்பதனையே உணர்த்துகின்றது. அதுவும் யாருக்கும் விட்டுவிட எவ்விதச் சலுகையுமற்ற ஒரு கடமையாக உள்ளது. ([30])

    நபியவர்களுடைய இவ்வுபதேசத்திற்கு முதலில் கட்டுப்பட்டவர்கள் ஸஹாபாக்களாகும். அவர்களிலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரே முன்னிலையிலுள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விடயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)([31]) அதாவது அவர்கள் விடயத்தில் நபியவர்களுடைய உபதேசத்தைக் கடைபிடியுங்கள். அவர்களுக்கு நோவினை செய்யாதீர்கள். துன்பமிழைக்காதீர்கள். ([32])

    மேலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் உறவினர்களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்து கொள்வதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். ([33])

    உமர் (ரலி) அவர்கள் நன்கொடைகள் வழங்கும் போது நபியவர்களுடைய உறவினர்களையே சிறப்பித்து முன்னிலைப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். மக்களுக்கு வழங்கும் அரச நன்கொடைக்காக அவர்களின் பெயர்களைப் பதியும்போது, "உங்களிலிருந்து ஆரம்பிப்போமே" என்று மக்கள் கூறினர். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "இல்லை, நபியவர்களுடைய உறவினர்களிலிருந்தே ஆரம்பியுங்கள். அல்லாஹ் உமரை எங்கு வைத்துள்ளானோ அந்த இடத்திலேயே வைத்துவிடுங்கள்." அத்துடன் ஹாஷிமின் சந்ததியினரிடமிருந்து ஆரம்பித்து முத்தலிபின் சந்ததியினரையும் அவர்களுடன் இணைத்துக் கொண்டார்கள். ([34])

    2. அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல் : ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களுடைய உறவினர்களுக்கு நாம் பேண வேண்டிய பல உரிமைகள் உள்ளன. ஏனெனில் அல்லாஹ் (போரில் கிடைக்கும்) ஐந்திலொரு பகுதி, வரிப்பணம் என்பவற்றில் அவர்களுக்கு ஒரு பங்கை வைத்துள்ளான். நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லுவதுடன் சேர்த்து இவர்கள் மீதும் ஸலவாத் சொல்லப் பணித்துள்ளான். நபியவர்களுடைய உறவினர்கள் மீது ஸலவாத் சொல்லுவதானது, முஸ்லிம்களிடம் அவர்களுக்கிருக்கும் உரிமையாகவும், இதன் காரணத்தினால் அம்முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உள்ளது. ([35])

    இறைவன் கூறுகின்றான் : "அல்லாஹ்வும் வானவர்களும் இந்த நபிக்கு ஸலவாத் சொல்கின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும்கூறுங்கள்". (அஹ்ஸாப் 56).

    3. மேற்கூறியது போல் அல்லாஹ் (போரில் கிடைக்கும்) ஐந்திலொரு பகுதி, (போரின்றிக் கிடைக்கும்) வரிப்பணம் என்பவற்றில் அவர்களுக்கு ஒரு பங்கை வைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்". (அன்பால் 41). மேலும் கூறுகின்றான் : "பல்வேறு ஊராரிடமிருந்து எதை தனது தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியது." (அல்ஹஷ்ர் 41).

    இவர்களைப் பரிசுத்தப் படுத்தும் நோக்கில் ஸகாத்தைத் தடைசெய்த அல்லாஹ் அதற்குப் பதிலாக (போரில் கிடைக்கும்) ஐந்திலொரு பகுதியையும் நபியவர்களுக்கு வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்பட்ட (யுத்தமின்றிக் கிடைக்கும்) வரிப்பணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். நபியவர்கள் கூறினார்கள் : "மறுமைக்கிடையில் அல்லாஹ்வுக்கு எந்த இணையும் ஏற்படுத்தாமல் அவன் மாத்திரம் வணங்கப்படுவதற்காக வாளைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேன். )போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய( என்னுடைய செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. என் கட்டளைக்கு மாறு செய்பவர் மீது பணிவும் சிறுமையும் விதியாக்கப்பட்டுள்ளது. யார் மற்றோர் சமூகத்திற்கு ஒப்பாகிறாரோ அவரும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவராவார். ([36])

    புகழனைத்தும் அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

    [1] . முஸ்லிம் 2408.

    [2] . ஷரஹுல் அகீதில் வாஸிதிய்யா 2/274,275 )சிறு மாற்றங்களுடன்(.

    [3] . 'அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரிடத்தில் அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள்' என்ற நூலிலிருந்து பக் : 08, ஆசிரியர் : அப்துல் முஹ்ஸின் அல்பத்ர்

    [4] . இப்னு அபீ ஷைபா 2/429 (10708). இதன் அறிவிப்பாளர் வரிசை ஹஸன் எனும் தரத்திலுள்ளதாக இப்னு ஹஜர் (ரஹ்) பத்ஹுல் பாரீ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். 3/416.

    [5] . புஹாரி 1485, முஸ்லிம் 169.

    [6]. முஸ்லிம் 1069.

    [7] . 'கும்மு' என்பது குதைர் என்ற இடத்திலுள்ள நீர்நிலையாகும். ஸமஃஷரீ என்ற அறிஞர் கூறுகின்றார் : 'குதைர் கும்மு' என்பது மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையில் 'ஜுஹ்பா' என்ற இடத்திலிருந்து 3 மைல்கள் தொலைவிலுள்ளது. (யாகூதுல் ஹமவீ என்பவர் எழுதிய முஃஜமுல் புல்தான் 3/248.) இப்போதனை துல்ஹஜ் மாதம் 18ம் நாள் நிகழ்த்தப்பட்டது.

    [8] . முஸ்லிம் 2408.

    [9] . திர்மிதீ 657. இந்நபிமொழி "ஹஸன் ஸஹீஹ்" எனும் தரத்திலுள்ளதாக் கூறியுள்ளார்கள்.

    [10] . புஹாரி 3711,3712, முஸ்லிம் 1759.

    [11] . ஜிலாஉல் அப்ஃஹாம் பக் 328.

    [12] . முஸ்லிம் 1072.

    [13] . புஹாரி 3140.

    [14] . அபூ தாவூத் 2980. இதன் அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹ் எனும் தரத்திலுள்ளதாக அல்பானீ (ரஹ்) ஸஹீஹ் ஸுனன்அபீ தாவூத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் 2/577 (2582).

    [15] . ஜாமிஉல் மஸாஇல் 3/75,76.

    [16] . முஸ்லிம் 2424.

    [17] . மின்ஹாஜுஸ் ஸுன்னா 7/81.

    [18] . முஸ்லிம் 2404.

    [19] . மின்ஹாஜுஸ் ஸுன்னா 4/13.

    [20] . அல் கஷ்ஷாப் 1/566.

    [21] . கினானா நபி (ஸல்) அவர்களின் தந்தை வழியில் 14வது பாட்டனாராவார்

    [22] . குறைஷ் நபி (ஸல்) அவர்களின் தந்தை வழியில் 11வது பாட்டனாரான பிஹ்ர் என்பவரின் புனைப்பெயராகும். 13வது பாட்டனாரான நழ்ர் பின் கினானா என்பவரின் புனைப்பெயர் என்றும் கூறப்படுகின்றது.

    [23] . ஹாஷிம் நபி (ஸல்) அவர்களின் தந்தை வழியில் 3வது பாட்டனாராவார்

    [24] . முஸ்லிம் 2276.

    [25] . இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் 1/419,420.

    [26] . முஸ்னத் அஹ்மத் 3/307 )1788(

    [27] . புஹாரி 3369, முஸ்லிம் 407.

    [28] . "ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமியா(ரஹ்)விடத்தில் அஹ்லுல் பைத்" என்ற நூலிலிருந்து. ஆசிரியர் உமர் அல்கர்மூசீ பக் 188

    [29] . முஸ்லிம் 2408.

    [30] . அல்முப்ஃஹிம் 6/304.

    [31] . புஹாரி 3713.

    [32] . பத்ஹுல் பாரீ 7/79.

    [33] . புஹாரி 3712, முஸ்லிம் 1759.

    [34] . மின்ஹாஜுஸ் ஸுன்னா 6/33, தாரீகுத் தபரீ 2/570.

    [35] . மஜ்மூஃ பதாவா 3/407, மின்ஹாஜுஸ் ஸுன்னா 6/606.

    [36] . முஸ்னத் அஹ்மத் 9/ 478 )5667( .

    معلومات المادة باللغة العربية